ADDED : பிப் 21, 2024 06:37 AM
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு, மேல்மா, மணிபுரம், தேத்துறை, குரும்பூர், நர்மாபள்ளம், அத்தி உள்ளிட்ட, 11 கிராமங்களில், 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 20 விவசாயிகளை கைது செய்தும், 8 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தும், தமிழக அரசு சிறையில் அடைத்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அனைவரும் விடுவிக்கப்பட்டு, குண்டர் சட்டமும் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 16ல் சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, 'மேல்மா சிப்காட் திட்டத்திற்கு அரசு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விவசாயிகளே இல்லை. அவர்கள் பெயரில், 1 சென்ட் நிலம் கூட இல்லை' என, கூறினார்.
இதை, சபை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரியும், அமைச்சர் பதவி விலக கோரியும், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க, சென்னை நோக்கி நேற்று புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் செல்ல விடாமல், மேல்மா பகுதியிலேயே தடுத்தனர். மேல்மா கூட்ரோட்டில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

