குன்னுாரில் மாயமான இன்ஜினியர் 300 அடி பள்ளத்தில் சடலமாக மீட்பு
குன்னுாரில் மாயமான இன்ஜினியர் 300 அடி பள்ளத்தில் சடலமாக மீட்பு
ADDED : மார் 17, 2024 07:42 AM

குன்னுார் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 26; ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன தொழில்நுட்ப இன்ஜினியர். இவருடன் தர்மபுரி, சேலம், மதுரை, பெங்களூரு, நீலகிரி உள்ளிட்ட பகுதி ஐ.டி.,யில் பணிபுரியும் இன்ஜினியர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்களாக உள்ளனர்.
இவர்கள், 10 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்று, நேற்று முன்தினம் குன்னுார் கொலக்கம்பை அருகே உள்ள தடை செய்யப்பட்ட செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்றனர். மாலையில் மலை அடிவார பகுதிக்கு, 7 பேர் திரும்பி உள்ளனர். குளவி கூண்டு கலைந்ததால் அதில் பிரவீன்குமார் உட்பட 3 பேர் சிக்கி ஓட்டம் பிடித்தனர்.
தர்ஷத் என்பவர் அடிவாரம் வந்து தகவல் தெரிவித்தார். படுகாயமடைந்த வினோத் குமார், 29, குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாயமான பிரவீன் குமாரை போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தேடினர். நேற்று காலை மீண்டும் ட்ரோன் வாயிலாக மலைப்பகுதிகளில் தேடினர்.
அப்போது, 300 அடி பள்ளத்தில் முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் உடல் கண்டறியப்பட்டது. கயிறு கட்டி உடலை ஒன்றரை கி.மீ., துாரம் சுமந்து வந்தனர்.

