ADDED : ஜூலை 14, 2011 11:50 PM

சென்னை : தமிழக சட்டசபைக்கு ஆங்கிலோ இந்தியப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள நான்சி ஆன் சிந்தியா, எம்.எல்.ஏ.,வாக நேற்று பொறுப்பேற்றார்.
தமிழக சட்டசபையில், நியமன எம்.எல்.ஏ.,வாக நான்சி ஆன் சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். விழுப்புரத்தில் பள்ளிப் படிப்பையும், தஞ்சாவூரில் எம்.பி.பி.எஸ்., படிப்பையும், புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ முதுகலை பட்டயப் படிப்பையும் முடித்தவர்.
கடந்த 19 ஆண்டுகளாக, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஸ்டான்லி பிரான்சிஸ், மதுரையில் தொழிற்சாலை வைத்துள்ளார். இவர், மெக்கானிக்கல் இன்ஜினியர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சட்டசபையில் ஆங்கிலோ இந்தியப் பிரதிநிதியாக, முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டுள்ள நான்சி ஆன் சிந்தியா, நேற்று எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபை செயலர் ஜமாலுதீன் உடனிருந்தார்.
பதவியேற்றது குறித்து நான்சி கூறும்போது, ''எனக்கு தமிழ் நன்றாக புரியும்; ஓரளவு பேசவும் முடியும். முடிந்தளவு சட்டசபையில் தமிழில் பேசுவேன். எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கும், கடவுளுக்கும் நன்றி,'' என்றார்.