மாவட்டத்துக்கு ஒரு மாதிரி சூரியசக்தி கிராமம் 37 கிராமங்களை தேர்வு செய்தது மின் வாரியம்
மாவட்டத்துக்கு ஒரு மாதிரி சூரியசக்தி கிராமம் 37 கிராமங்களை தேர்வு செய்தது மின் வாரியம்
ADDED : ஏப் 11, 2026 04:31 AM
சென்னை: சென்னை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி சூரியசக்தி கிராமம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, செங்கல்பட்டில் கோவளம், காஞ்சிபுரத்தில் தாமல், மதுரையில் கம்பூர் உட்பட, 37 கிராமங்களை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் சூரியசக்தி மின் பயன்பாட்டை ஊக்குவிக்க, 'பி.எம்., - சூர்ய கர் முப்தி பிஜிலி யோஜனா' திட்டத்தை, மத்திய அரசு, 2024ல் துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு, 30,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மற்றொரு பிரிவாக, அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி சூரிய கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி, கிராமத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அங்குள்ள வீடுகள், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டடங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் தெரு விளக்கு, தண்ணீர் இறைக்கும் மோட்டார் பம்ப் அமைக்கப்படும். ஒரு சூரியசக்தி கிராமம் அமைக்க மத்திய அரசு, 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.
தமிழகத்தில் சென்னை தவிர்த்து, 37 மாவட்டங்களிலும் சூரியசக்தி கிராமம் உருவாக்கும் பணிகளை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் மேற்கொள்கிறது.
இதற்காக, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, பசுமை கிராமம் உருவாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலம் முழுதும், 37 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, எவ்வளவு மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும்; அதை பயன்படுத்துவதற்கான மின் வழித்தடம் உள்ளிட்டவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்த பணிகள் முடிவடைந்ததும் மின் நிலையம் அமைக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரியசக்தி மின்சார வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
