ADDED : செப் 29, 2025 06:37 AM

சென்னை: 'தமிழகத்தில் சில பகுதிகளில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், வால்பாறை, சின்கோனா பகுதிகளில், தலா, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அக்டோபர், 4 வரை சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.