ADDED : ஆக 14, 2025 02:58 AM
சென்னை:வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.
இதன்பின், காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா இடையே கரையை கடக்க கூடும்.
அதே நேரத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது, ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று, இடி மின்னலுடன் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில், வரும் 19 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு மற்றும் தென் மாவட்ட கடலோர பகுதிகள், இதற்கு அப்பால் உள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்று, சூறாவளிக்காற்று வீசக் கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.