ADDED : டிச 08, 2025 06:59 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல் பகுதியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்ததாக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய இடங்களில், தலா, 3 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில், நாளை மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

