ADDED : மார் 01, 2024 12:14 AM
சென்னை:சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளம் வாயிலாக, பங்குச் சந்தை முதலீடு குறித்து ஆலோசனை வழங்குவது போல, 'லிங்க்' அனுப்புகின்றனர். அதை, 'கிளிக்' செய்தால் தொடர்பு கொள்வர்.
இவர்களின் பேச்சுக்கு செவி சாய்த்தால், வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவர். அதேபோல, 'பெடக்ஸ்' நிறுவனம் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு போதை பொருள் பார்சல் அனுப்பி உள்ளீர்கள் என, சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கின்றனர். சமீபத்தில், தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி உள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம், 50,000 ரூபாயை சுருட்டிய மர்ம நபர்கள், அதை ராஜஸ்தானில் உள்ள, ஏ.டி.எம்., மையத்தில் இருந்து எடுத்துள்ளனர் என, தெரிய வந்துள்ளது.

