ADDED : பிப் 18, 2024 06:00 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சேர்ந்த மாயழகன் மனைவி நந்தினி தேவி, மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி பெற, திண்டுக்கல் - மதுரை சாலையில், எஸ்.ஆர்., நகரில், 'எர்த் டிரஸ்ட்' என்ற நிறுவனத்தை அணுகினார்.
டிரஸ்ட் நிர்வாகிகள் வலியுறுத்தலின்படி, கடன் பெற குழு உறுப்பினர்களிடம் வசூலித்த, 40 லட்சம் ரூபாயை நந்தினி தேவி, நிறுவனத்தில் கட்டினார். திடீரென நிறுவனம் மூடப்பட்டு, நிர்வாகிகள் தலைமறைவாகினர்.
நந்தினி தேவி, புகார்படி, போலீசார், கடலுார் மாவட்டம், ராமநத்தத்தைச் சேர்ந்த செல்வராஜ், 50, என்பவரை கைது செய்தனர். செல்வராஜ் இதேபோல், பலரிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்தது தெரிந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட செல்வராஜ் ஜாமினில் வெளிவந்து தலைமறைவானார். சென்னை, குரோம்பேட்டையில் பதுங்கி இருந்த செல்வராஜை, ஆறு ஆண்டுகளுக்கு பின், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.