குரங்கு அம்மை நோய் பாதிப்பு மருத்துவ துறையினருக்கு பயிற்சி
குரங்கு அம்மை நோய் பாதிப்பு மருத்துவ துறையினருக்கு பயிற்சி
ADDED : ஆக 21, 2024 02:33 AM
சென்னை:மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை, தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹூ தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும், அண்டை நாடுகளில் பாதிப்பு இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு கூட்டத்தில், மருத்துவ கண்காணிப்பு, பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின்படி சிகிச்சை அளித்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குரங்கு அம்மை பாதிப்புகளை உறுதி செய்வதற்கு, சென்னை கிங் ஆய்வகம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
அந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல்களை ஏற்படுத்தவும், மருத்துவ துறையினருக்கு பயிலரங்கம் நடத்தவும், பயிற்சி அளிக்கவும், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹூ கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

