விடுதலை சிறுத்தைகளின் '25'! தி.மு.க. அமைச்சரின் ரியாக்சன்
விடுதலை சிறுத்தைகளின் '25'! தி.மு.க. அமைச்சரின் ரியாக்சன்
ADDED : டிச 23, 2024 04:02 PM

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து இப்போது பேச தேவையில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். என்னை போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், இது கட்சிக்கான சரியான நேரம் என்று எண்ணுகிறோம் என்றும் கூறி இருந்தார்.
வன்னியரசின் பேட்டி குறித்து பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வன்னியரசின் 25 தொகுதிகள் என்பது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சி நிர்வாகிகளின் விருப்பமும் கூட என்று கூறி இருந்தார்.
இந் நிலையில் வன்னி அரசின் 25 தொகுதிகள் குறித்து தி.மு.க., முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது;
தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளன.இப்போது தொகுதி பங்கீடு குறித்து பேச தேவையில்லை. கூட்டணி, தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அப்போது பேசலாம். அ.தி.மு.க., போன்று கூட்டணி கட்சிகளை வெளியேற்றும் இயக்கம் தி.மு.க., அல்ல.
முதல்வர் கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர். தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் இருக்கின்றன. கூட்டணியை முதல்வர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கூட்டணிக் கட்சிகளை அவர் மதிக்கும் பண்பே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.