திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அரசை கண்டித்து தீக்குளித்த முருக பக்தர் உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அரசை கண்டித்து தீக்குளித்த முருக பக்தர் உயிரிழப்பு
UPDATED : டிச 18, 2025 08:55 PM
ADDED : டிச 18, 2025 07:46 PM

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரைக்கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்தவர் பூர்ணசந்திரன், மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பூர்ணசந்திரன் ஓய்வு நேரங்களில் சரக்கு வாகனம் மூலம் காய்கறி, பழவிற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இன்று (டிச.,18) மாலை 4:00 மணிக்கு சரக்கு வாகனத்துடன் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள போலீஸ் அவுட்போஸ்ட் சந்திப்பில் உள்ள ஈ.வெ.ரா., சிலை அருகேயுள்ள, ஆளில்லா போலீஸ் பூத்திற்கு சென்று, உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்களும், அவ்வழியே வந்த துணைமேயர் நாகராஜனும் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் பூர்ணசந்திரன் கருகி இறந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தீபம் ஏற்றாத காரணத்தால் வேதனை அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம், முருக பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல்
இதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த முருக பக்தர், பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, பூர்ண சந்திரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜ சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் பூர்ண சந்திரன் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

