ADDED : நவ 26, 2024 04:23 AM

பாலக்காடு : கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா, வரும் டிச., 11ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று தொடங்குகிறது.
கோவில் வளாகத்தில் உள்ள மேல்புத்தூர் கலையரங்கில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் உற்சவத்தை, மாநில உயர் கல்வி-, சமூக நீதித்துறை அமைச்சர் பிந்து துவக்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில், இந்த ஆண்டு செம்பை நினைவு விருது வயலின் கலைஞர் கன்னியாகுமாரிக்கு அமைச்சர் வழங்குகிறார்.
அதன்பின், கன்னியாகுமாரியின் சங்கீதக் கச்சேரி அரங்கேறுகிறது. நிகழ்ச்சியில், மாநில அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான விருது பெற்ற வித்யாதரன் கவுரவிக்கப்படுகிறார்.
15 நாட்கள் நடக்கும், சங்கீத உற்சவத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, நேற்று மாலை, 6:30 மணிக்கு பாலக்காடு செம்பையில் இருந்து, வைத்தியநாத பாகவதரின் தம்புரா வாகன ஊர்வலமாக குருவாயூருக்கு புறப்பட்டது. செம்பை வித்யா பீடத் தலைவர் செம்பைசுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகனி டமிருந்து, குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாகி வினயன், செம்பை சங்கீத உற்சவம் கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக்கொண்டனர்.
குருவாயூர் கோவில் விழா மேடையில் இன்று மாலை தம்புரா பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தம்புரா புறப்பாடு நிகழ்ச்சிக்கு முன்னதாக, செம்பையில், மண்ணூர் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் சங்கீத கச்சேரி நடந்தது.
இவருக்கு ஒற்றைப்பாலம் ஜெயதேவன் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்கு) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.