முத்துராமலிங்க தேவர் சிலை தங்க கவசம் அ.தி.மு.க., ஒப்படைப்பு
முத்துராமலிங்க தேவர் சிலை தங்க கவசம் அ.தி.மு.க., ஒப்படைப்பு
ADDED : அக் 25, 2025 06:20 AM

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில், கடந்த 2014ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அந்த தங்க கவசம், மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி சமயத்தில், அ.தி.மு.க., பொருளாளரும், தேவர் நினைவிட பொறுப்பாளரும் நேரில் வந்து வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்றுச் சென்று, பசும்பொன்னில் உள்ள சிலைக்கு அணிவிப்பர்.
விழா முடிந்தபின் மீண்டும் வங்கி லாக்கரில் ஒப்படைப்பது வழக்கம்.
இதன்படி, தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, அ.தி.மு.க., பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன், நேற்று வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று, தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் அதை ஒப்படைத்தார்.
சீனிவாசன் கூறுகையில், ''சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்,'' என்றார்.

