விபரங்களை மறைத்ததால் வழக்கு ஐகோர்ட்டில் நாகேந்திரன் பதில்
விபரங்களை மறைத்ததால் வழக்கு ஐகோர்ட்டில் நாகேந்திரன் பதில்
ADDED : ஜூலை 04, 2025 12:45 AM
சென்னை:வேட்பு மனுவில் வழக்கு விபரங்களை மறைத்ததால், ராபர்ட் புரூசுக்கு எதிராக தேர்தல் வழக்கு தொடர்ந்ததாக, லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் காங்., சார்பில் ராபர்ட் புரூஸ், பா.ஜ., சார்பில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
அறிவிக்க வேண்டும்
இதில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ், 1.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரின் வெற்றியை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவில், 'தேர்தலில் வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ், தன் பிரமாண பத்திரத்தில், அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் உள்ள சொத்து விபரங்கள் மற்றும் தன் மீதான குற்றவியல் வழக்குகளை மறைத்துள்ளார். தேர்தலை ரத்து செய்து, நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜரானார். சாட்சி கூண்டில் ஏறி, சத்திய பிரமாணம் செய்து வாக்குமூலம் அளித்தார். இதன்பின் அவரிடம் ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
அதைத்தொடர்ந்து, '1.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்ற நிலையில், ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதாக கூறுவது தவறு' என, நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
உத்தரவு
மேலும், 'வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான், ராபர்ட் புரூசுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ததாகவும், இதில், வேறு எந்த உள் நோக்கமும் இல்லை' என்றும் கூறினார்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக, வாக்குமூலம் அளித்த நிலையில், குறுக்கு விசாரணை நிறைவு பெறாததால், வழக்கு விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மீண்டும் ஆஜராகும்படி, நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார்.