நலிவடைந்த விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா; நயினார் நாகேந்திரன் கேள்வி
நலிவடைந்த விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா; நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : ஜூலை 11, 2025 05:25 PM

சென்னை: நலிவடைந்த விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, அவர்களைத் தொடர்ந்து வஞ்சிப்பது தான் திராவிட மாடலா என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழக அரசு சார்பில் 2026ம் ஆண்டு பொங்கலன்று வழங்க இருக்கும் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி அரசாணையில், கடந்த ஆண்டை விட 76 லட்சம் சேலைகள் மற்றும் 48 லட்சம் வேட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இதன் மூலம் வெறும் 26,300 விசைத்தறிகளுக்கு மட்டுமே வேலை இருக்கும் எனவும், இதனால் 1லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் 2 மாதம் வேலையிழக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்தாகவும் நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வருடம் முழுவதும் பொங்கல் வேட்டி, சேலைக்கான ஆர்டர்களை எதிர்நோக்கி காத்திருக்கும் நெசவாளர் பெருமக்கள், நூல் கொள்முதலில் ஊழல், மானியத் தொகையில் கமிஷன், வேட்டி, சேலை வழங்குவதில் முறைகேடு என திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் அல்லல்படுவது போதாதென்று ஒவ்வொரு வருடமும் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி எண்ணிக்கையை முடிந்த வரையில் திமுக அரசு குறைத்து வருவது ஏன்? ஏழை மக்கள் ஆளும் அரசை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் என்ற இளக்காரமா?
உலகிலேயேநாம் தான் நம்பர் ஒன் முதல்வர் என்ற கனவுலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நெசவாளர்களின் நலனில் அக்கறை செலுத்த தவறியதன் விளைவு என்ன என்பதை வரும் சட்டசபை தேர்தலில் புரிந்து கொள்வார். ஏழை மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் திமுக அரசுக்கு 2026ல் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.