திண்டுக்கல் - தேனி - குமுளி நெடுஞ்சாலை: 6 வழியாகிறது
திண்டுக்கல் - தேனி - குமுளி நெடுஞ்சாலை: 6 வழியாகிறது
ADDED : செப் 12, 2023 07:07 AM

சென்னை : திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்வதற்கானநடவடிக்கைகளை, தேசியநெடுஞ்சாலைகள் ஆணையம் துவங்கியுள்ளது.
திண்டுக்கல் - தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலை, தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு வழிச்சாலையாக பராமரிக்கப்படும் இது, 138 கி.மீ., நீளம் கொண்டது.
இந்த சாலையில் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசனில், வாகனங்கள் அதிகளவில் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இச்சாலையை நான்கு அல்லது ஆறு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. மூன்று மாதங்களில் திட்ட அறிக்கை பெற்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதன் பின்னரே, இச்சாலை விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிதி; நிலங்கள் தேவைப்படும் என்ற விபரங்கள் தெரியவரும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

