ADDED : டிச 13, 2024 01:30 AM
சென்னை:நடிகர் தனுஷ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் பதில் அளிக்கும்படி, நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் 'நெட்பிளிக்ஸ்' நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையைச் சேர்ந்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது.
இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த, நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், வொண்டர்பார் நிறுவனத்தின் இயக்குநர் தாக்கல் செய்த மனு:
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த, நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்; 2015ல் படம் வெளியானது. படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.
படம் வெளியாகி, 10 ஆண்டுகளுக்கு பின், நெட்பிளிக்ஸ் யு டியூப் சேனலில், நயன்தாராவின் திருமணம் தொடர்பான வீடியோ 'டிரெய்லர்' வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியில், எங்கள் படத் தயாரிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் படத்தில் இடம் பெறாத காட்சிகளும் உள்ளன. இதற்கு, எங்களின் அனுமதி பெறவில்லை.
எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகளுடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதனால், இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக 10 கோடி ரூபாயும், காட்சிகளை பயன்படுத்த தடையும் விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பதில் மனுக்களுக்கு மனுதாரர் தரப்பிலும் பதில் அளிக்க உத்தரவிட்டு, தடை கோரிய வழக்கின் விசாரணையை ஜனவரி 8க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

