மருத்துவ படிப்புக்கான 'நீட்' மாதிரி தேர்வு சென்னையில் இன்று நடத்துகிறது 'தினமலர்'
மருத்துவ படிப்புக்கான 'நீட்' மாதிரி தேர்வு சென்னையில் இன்று நடத்துகிறது 'தினமலர்'
ADDED : ஏப் 26, 2025 01:02 AM
சென்னை:'தினமலர்' நாளிதழ் சார்பில், 'நீட்' மாதிரி தேர்வு மற்றும் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்று மருத்துவம் படிப்பது. அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழும், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரியும் இணைந்து, இன்று காலை 8:00 முதல் மதியம் 1:30 மணி வரை, சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், 'நீட்' மாதிரி தேர்வை நடத்துகின்றன.
மேலும், 'நீட்' தேர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடக்கிறது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி, தேர்வு குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகளை, பாடங்களை புரிந்து கொள்வதற் கான வழிகாட்டுதல்களை நிபுணர்கள் வழங்குவர்
ஒவ்வொரு மருத்துவ படிப்புக்கும் தேவையான தகுதிகள், மதிப்பெண்கள் அடிப்படையிலான வாய்ப்புகள், சிறந்த மருத்துவ கல்லுாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும். இதனால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பமடைவதை தவிர்க்கலாம்
நிகழ்ச்சியில் நடத்தப்படும், 'நீட்' மாதிரி தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம் பெறும். இதனால், மாணவர்கள் தங்களின் திறனை அறிவதுடன், நுண்ணறிவையும் பெற முடியும்
தேர்வின் அடிப்படையில், தனித்தனி மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படும். அதன் வாயிலாக, மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறியலாம்
ஆர்.ஜி.ஆர்., அகாடமி இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தரும் வகையில், மாதிரி தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும்.
விதிமுறைகள்
மாணவர்கள், புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்
ஒளி புகும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து வரலாம். தேர்வறைக்குள், மொபைல் போன் எடுத்து வர அனுமதி இல்லை.
முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு
முன்பதிவு செய்த மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள, 'நீட்' தேர்வு நேரம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை, மாணவர்கள் பின்பற்ற வேண்டும்
கருத்தரங்கின் நிறைவில், மாணவர்களுக்கான தேர்வு விடைகள் வழங்கப்படும்.