தேவரை முதல்வராக்க விரும்பிய நேரு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்
தேவரை முதல்வராக்க விரும்பிய நேரு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்
ADDED : அக் 31, 2025 01:13 AM
கமுதி:  'முத்துராமலிங்கத் தேவர் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான தலைவர்' என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் , மரியாதை செலுத்தினார். பின்னர், தேவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று தியானம் செய்தார்.
பின்னர், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
தேவர் ஒரு சித்தர். வாய்மை, சத்தியம் தன் கடமை என வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தவர். கடந்த 24 ஆண்டுகளாக தேவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
துணை ஜனாதிபதி ஆன பின், தமிழகத்திற்கு முதல் முறையாக வரும்போது அவருக்கு அஞ்சலி செலுத்துவதை பெருமையாக நினைக்கிறேன்.
அவர், ஒரு சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை. பெருவாரியான சமுதாய மக்களுக்கு தலைமை ஏற்றவர். பேரையூர் வேலுசாமி நாடார் இல்லத்தில் அடிக்கடி உணவருந்துவார். மாற்று இனத்தை சேர்ந்த பெருமாள் என்பவரை எம்.எல்.ஏ., ஆக்கினார்.
தன் சொத்துகளை அனைவருக்கும் தந்தவர். நேதாஜியின் ஐ.என்.ஏ., படை தளபதியாக இருந்தவர். வாழ்நாள் முழுதும் நேதாஜியுடன் இருந்தவர்.
முன்னாள் பிரதமர் நேரு, தேவரை அழைத்து முதல்வராக்குகிறேன் என கூறிய போதும், அதை ஏற்காமல், நேதாஜிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தேவர் கூறினார்.
விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என தன் வாழ்நாள் கடைசி வரையும் கூறியவர், தேவர்; அவர் பொய் சொல்ல மாட்டார். அதையே நானும் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

