நெல்லை அழியாபதீஸ்வரர் கோவில் நிலம் கிறிஸ்துவரிடம் இருந்து மீட்பு
நெல்லை அழியாபதீஸ்வரர் கோவில் நிலம் கிறிஸ்துவரிடம் இருந்து மீட்பு
UPDATED : மார் 13, 2024 03:59 AM
ADDED : மார் 13, 2024 12:55 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கருப்பந்துறையில், தாமிரபரணி ஆற்றின் கரையில் அழியாபதீஸ்வரர் கோவில் உள்ளது. கோரக்கச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமையான கோவில் இது.
இந்த கோவில் முன், தாமிரபரணி ஆற்றை ஒட்டி, 70 சென்ட் நிலத்தில் நந்தவனம் இருந்தது. கருப்பந்துறை ஊராட்சித் தலைவராக இருந்த எல்.தர்மராஜ் என்ற கிறிஸ்துவர், நந்தவன நிலத்தை ஆக்கிரமித்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளை நடத்தி வந்தார்.
அந்த நிலத்தை மீட்க ஹிந்து முன்னணியினர் பல ஆண்டுகளாக போராடியும் முடிவு ஏற்படவில்லை. கோவிலுக்குரிய நில ஆவணங்களுடன் ஹிந்து முன்னணியினர் அண்மையில் அறநிலையத்துறையில் புகார் செய்தனர்.
கோவில் செயல் அலுவலர் ராம்குமார் தலைமையில், அறநிலையத்துறையினர் கோவில் நிலத்தை மீட்டு வேலி அமைத்தனர். அதன் பிறகும் தர்மராஜ் தலைமையில் ஒரு கும்பல் கற்களை அகற்றி, கட்டடம் கட்டத் துவங்கியது. இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஹிந்து முன்னணி தரப்பில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹிந்து முன்னணியினர் புகாரின்படி, தர்மராஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின்படி, உதவி ஆணையர் கவிதா முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் 39 சென்ட் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது; அதன் மதிப்பு, 2 கோடி ரூபாய்.
நிலத்தை சட்ட விரோதமாக இத்தனை ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த நபர் மீது, அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

