நியோமேக்ஸ் நிறுவன மோசடி: வங்கி கணக்கு விபரங்கள் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
நியோமேக்ஸ் நிறுவன மோசடி: வங்கி கணக்கு விபரங்கள் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 14, 2024 11:53 PM
மதுரை : மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவன வங்கி கணக்கு விபரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை பைபாஸ் ரோடு எஸ்.எஸ்.காலனியில் 'நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ்' நிறுவனம் செயல்பட்டது. வாடிக்கையாளர்களிடம் டிபாசிட் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அதன் இயக்குனர் கமலக் கண்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
கமலக் கண்ணனுக்கு முதலீட்டாளர் நல பாதுகாப்பு (டான்பிட்) மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அதற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்காபுரம் ரவிசங்கர்,'நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளேன். போலி நிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றியுள்ளனர். டான்பிட் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்காமல் ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதுபோல் மதுரை அச்சம்பத்து கபில், விளாங்குடி சிமியோன் ராஜா, பொன்மேனி பாலசுப்பிரமணியனுக்கு டான்பிட் நீதிமன்றம் ஜாமின் அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை ராஜ்குமார், சுரேஷ், கடலுார் பாலகிருஷ்ணன் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதி: பிரச்னைக்கு சுமூக தீர்வு காண 10 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் கமிஷனர்களை நியமித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மேல்நடவடிக்கையை தொடர இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. நிறுவன சொத்துக்களை முடக்க மார்ச் 14 க்குள் அரசாணை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக உள்துறை செயலர் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு உத்தரவிட்டார்.
நேற்று நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
அரசு தரப்பு: 19 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2 சொத்துக்களை முடக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கமிஷனர்களை நியமிக்கத் தேவையில்லை.
நீதிபதி: ரூ.1000 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தனி அலுவலர்களை நியமிக்க பொதுவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகள், அவற்றில் நிலுவையில் உள்ள தொகை விபரங்களை அரசு தரப்பிலும், நிறுவனம் தரப்பிலும் மார்ச் 21 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் செக்கலிங்காபுரம் ரவிசங்கர் தாக்கல் செய்த மற்றொரு மனு:
நியோமேக்ஸில் ரூ.8 லட்சம் முதலீடு செய்தேன். பணத்தை திரும்பத்தராமல் மோசடி செய்தது. மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அங்குள்ள அரசு வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். நியோமேக்ஸ் துணை நிறுவனத்திற்கு சொந்தமான சில சொத்துக்களை அவரது மனைவி பெயரில் வாங்கியுள்ளார். அச்சொத்துக்களை முடக்க மற்றும் முகம்மது இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

