உதயநிதியை முதல்வர் என்று நாங்கள் சொல்லவே இல்லை: ரகுபதி
உதயநிதியை முதல்வர் என்று நாங்கள் சொல்லவே இல்லை: ரகுபதி
ADDED : ஜன 05, 2026 10:06 PM

புதுக்கோட்டை; தமிழகத்தில் 'இண்டி' கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. நாங்கள், அமித் ஷாவை மண்ணை கவ்வ வைப்போம். உதயநிதியை முதல்வர் என்று நாங்கள் சொல்லவே இல்லை என்று கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
பொங்கல் பரிசாக, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறோம். தமிழக வரலாற்றில் இதுவரை, 2,500 ரூபாய்க்கு மேல் பொங்கல் பரிசு, வழங்கப்பட்டதில்லை. எங்கள் திட்டங்களை வைத்து தான், மக்கள் ஓட்டு போடுவார்கள். எங்கள் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்து விட்டன.
உதயநிதியை முதல்வர் என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. துணை முதல்வர் என்றுதான் கூறி வருகிறோம். இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான். உதயநிதி, எதிர்காலத்தில் தலைவராக வரலாம். தற்போது அவர், தேர்தல் வெற்றிக்காக சுழன்று பணியாற்றி வருகிறார்.
புதுக்கோட்டை பா.ஜ., நிகழ்ச்சிக்கு, கூட்டம் சேராததால் தான், அமித் ஷா மேடையேற தாமதமானது. தமிழகத்தில் அமித் ஷாவுக்கு இடம் இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வே, புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்லும் தகுதி, பழனிசாமிக்கு இல்லை. அவர்தான் 'நம்பர் ஒன்' ஊழல்வாதி.
காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அது எங்கள் பிரச்சனையில்லை. தமிழகத்தில் 'இண்டி' கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. இங்கிருந்து, எந்தக் கட்சியும் வெளியே செல்லாது. எங்கள் வெற்றி தெளிவாக உள்ளது. எதைப் பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. தமிழகத்தில் அமித் ஷாவை நாங்கள் மண்ணை கவ்வ வைப்போம்.
தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது வேடிக்கையானது. தமிழக அமைச்சர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வருவதாக அமித் ஷா கூறியுள்ளார். நாங்கள் எங்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து அமித் ஷா கூறிய கருத்துகளில் உண்மையில்லை. தமிழகத்தில் உரிய அனுமதியுடன் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தி.மு.க., மீது எதையாவது பழி போட வேண்டும் என்பதற்காகவே, கரூர் சம்பவத்திற்கும் செந்தில் பாலாஜிக்கும் சம்பந்தம் இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி வருகிறார்.
இவ்வாறு ரகுபதி கூறினார்.

