மத்திய அரசின் புதிய பி.எட்., படிப்பு முடிவெடுக்க முடியாமல் தமிழகம் திணறல்
மத்திய அரசின் புதிய பி.எட்., படிப்பு முடிவெடுக்க முடியாமல் தமிழகம் திணறல்
ADDED : ஏப் 11, 2026 04:32 AM
- நமது நிருபர் -
ஒருங்கிணைந்த புதிய பி.எட்., படிப்பை அமல்படுத்துவது குறித்து, முடிவெடுக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஒருங்கிணைந்த பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், தேசிய கல்விக் கொள்கை 2020ன்படி, ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., பட்டப்படிப்புகளுக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் எனும் ஐ.டி.இ.பி., திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
உத்தரவு இந்த திட்டத்தை, நாடு முழுதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், 2026 - 27ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்றும், பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பி.எஸ்சி., - பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., மாணவர் சேர்க்கையை, வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்துள்ளது.
ஆனால், அதற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம், நான்கு நிலைகளை கொண்டதாக உள்ளது. அதாவது, அடித்தள நிலை, ஆயத்த நிலை, இடைநிலை, முதன்மை நிலை என உள்ளது. அதில் எந்த நிலைகளில் வேண்டுமானாலும் வெளியேறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தயக்கம் அந்த வகையில், அடித்தள நிலையுடன் நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ்; ஆயத்த நிலையுடன் நிறைவு செய்பவர்களுக்கு டிப்ளமோ; இடைநிலையுடன் நிறைவு செய்பவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்; முதன்மை நிலையை நிறைவு செய்பவர்களுக்கு இரட்டை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இருப்பினும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக, இந்த திட்டம் இருப்பதால், இதை அமல்படுத்த, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை தயங்கி வருகிறது. ஏனெனில், தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தேசிய கல்விக் குழுமத்தின் உத்தரவுப்படி, ஏற்கனவே கற்பித்த படிப்பை ரத்து செய்த போதிலும், புதிய பாடத்தை துவங்க முடியாமல், பல்கலை திணறி வருகிறது.
