தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார்: சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை
தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் தயார்: சிவகாசியில் களைகட்டுகிறது விற்பனை
UPDATED : செப் 14, 2025 06:49 AM
ADDED : செப் 14, 2025 01:46 AM

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
அதிகாரிகளின் ஆய்வால் பட்டாசு ஆலைகள் மூடல், அவ்வப்போது பெய்த மழை உட்பட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு, 10 சதவீதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன; 4,000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
தீபாவளிக்கு இன்னும் 37 நாட்களே உள்ள நிலையில், வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரம் ஓரளவிற்கு முடிந்த நிலையில், தொடர்ந்து வியாபாரம் நடந்து வருகிறது.
தற்போது, தமிழகம் முழுதும் இருந்து சிறு வியாபாரிகள், மக்கள் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வர துவங்கியுள்ளனர். இதனால், பட்டாசு வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. அதே சமயத்தில், 5 முதல், 10 சதவீதம் வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் இளங்கோவன் கூறுகையில், ''உற்பத்தி குறைந்துள்ளதால், இந்தாண்டு பட்டாசுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வியாபாரம் களைகட்டி இருப்பதால், தீபாவளிக்கு முன்னதாக வியாபாரம் முழுமையாக முடியும்,'' என்றார்.