புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம்; கவர்னர் ரவி பேச்சு
புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம்; கவர்னர் ரவி பேச்சு
ADDED : டிச 29, 2025 10:23 PM

சென்னை:“நாட்டின் உண்மையான வளர்ச்சியை அறிய, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம்,” என கவர்னர் ரவி தெரிவித்தார்.
இந்திய பொருளாதார சங்கத்தின் 108ம் ஆண்டு மாநாடு, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த 27ம் தேதி துவங்கியது. அதன் நிறைவு விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது:
கடந்த 19ம் நுாற்றாண்டு துவக்கத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தோம். காலனித்துவ ஆட்சி காலத்தில் நம் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது.
தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். விரைவில், மூன்றாம் இடத்தை அடைவோம். கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சாதனைகள் உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது. இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை வேண்டாம். அது சரியான பாதையில் பயணிக்கிறது.
நாம் மேற்கத்திய நாடுகள் வகுத்த அளவுகோல்களை வைத்து, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுகிறோம். ஜி.டி.பி., வேலைவாய்ப்பு ஆகியவை மட்டுமே அளவுகோல்களாக உள்ளன. மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தால், நாட்டில் 52 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை, 33 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், 3.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி என்பது வருமானம் மட்டும் கிடையாது. குடிநீர், மின்சாரம், வீடு, கழிப்பிடம், சுகாதாரம், காப்பீடு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் பகுதிகள்தான்.
நாட்டின் புதிய பொருளாதார வளர்ச்சியை புரிந்துகொள்ள, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம். உண்மையான தரவுகளை சேகரித்து, புதிய பொருளாதார மொழியை உருவாக்குவது, இன்றைய பொருளாதார அறிஞர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில், வேல்ஸ் கல்விக் குழும தலைவர் ஐசரி கணேஷ், வி.ஐ.டி., நிறுவனர் விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

