ADDED : ஜூலை 04, 2025 12:37 AM
சென்னை:பழச்செடிகள் மற்றும் காய்கறி விதை தொகுப்புகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
'ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்' என்ற புதிய திட்டம், 125 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை என, ஆறு வகை காய்கறிகள் விதை தொகுப்பு, 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதற்கு, பப்பாளி, கொய்யா, எலுமிச்சை என, மூன்று வகையான பழச்செடிகள், ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
தேவையுள்ளவர்கள் இலவசமாகவும், 75 சதவீத மானிய விலையிலும் இவற்றை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் துவக்கி வைக்க உள்ளார்.