ADDED : ஆக 23, 2026 10:56 PM
பழைய வீடுகளுக்கு புதிய விலை வீட்டுவசதி வாரியம் மீது
விண்ணப்பதாரர்கள் புகார்
சென்னை: வீட்டுவசதி வாரியம், 'ஆன்லைன்' வாயிலான விற்பனை திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அதில் பழைய வீடுகளுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பல மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 10 ஆண்டுகளாக, இதில், பெரும்பாலான வீடுகள் விற்பனை ஆகாமல் முடங்கின.
கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில், இந்த வீடுகள், மனைகளை விற்க, ஆலோசகர் தேர்வு என, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அத்துடன் வீடுகளை விற்பதற்கு பதிலாக, வாடகை குடியிருப்புகளாக மாற்றவும் முடிவு செய்தனர்.
தற்போது, விற்காமல் தேங்கிய வீடுகளை வாடகை குடியிருப்பாக மாற்றக்கூடாது என, புதிய அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாது, பொதுமக்கள் ஆன்லைன் முறையில், இந்த வீடுகளை வாங்கலாம் என்றும் அறிவித்தது. அதன்படி, வீடுகள், மனைகள் விற்பனைக்கான ஆன்லைன் வசதியை, வீட்டுவசதி துறை அமைச்சர் ராஜ்குமார் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இதில், 7,659 வீடு, மனைகள் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் முறை விண்ணப்பபதிவு தற்போது நடந்து வருகிறது.
இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:
புதிய அரசு வந்த பின், ஆன்லைன் முறையில் வீடுகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சில திட்டங்கள் மட்டுமே, சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக உள்ளன. பெரும்பாலான வீடுகள், ஐந்து முதல், 10 ஆண்டுகள் பழையவை.
இதற்கு, தற்போதைய சந்தை நிலவர அடிப்படையில், வாரிய அதிகாரிகள் விலை நிர்ணயித்து உள்ளனர், 2020ல், 13 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட வீடுகள், தற்போது, 24 லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிலத்தின் மதிப்பு உயர்ந்து இருக்கும் என்றாலும், கட்டத்துக்கான தேய்மானம் ஆண்டுக்கு 5 சதவீதம் வரை குறைய வேண்டும். இதன்படி, வீடுகளுக்கு தற்போது தெரிவிக்கப்படும் விலை அதிகமாக உள்ளது. பழைய வீடுகளுக்கு, அதற்கு ஏற்ற நிலையில் விலை நிர்ணயிக்க வேண்டும். மேலும், வீடு வாங்க விரும்பும் மக்களுக்கு, வாரிய அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பதை, மேலதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
