ADDED : டிச 07, 2024 10:02 PM
சென்னை:தமிழகத்தில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, உணவு வழங்கல் துறைக்கு, தமிழக அரசின் மின் ஆளுமை முகமை ஒப்புதல் அளித்து உள்ளது.
புது ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் பரிசீலித்து, கார்டுகள் வழங்க ஒப்புதல் தருவர்.
அரசு சலுகைகளை பெற ஒரே குடும்பத்தில் வசிக்கும் பலர், தனித்தனியாக வசிப்பதாக சொல்லி, ரேஷன் கார்டுக்கு அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. எனவே, விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்த விண்ணப்பதாரர் பெயர், பெற்றோரின் கார்டில் உள்ளதா, தனியாக வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட விபரங்களை, தமிழக அரசின், 'இ - கவர்னன்ஸ்' எனப்படும், மின் ஆளுமை முகமை சரிபார்க்கிறது.
பின், தகுதியான விண்ணப்பதாரருக்கு ரேஷன் கார்டு வழங்க, உணவு வழங்கல் துறைக்கு, அது பரிந்துரை செய்கிறது. அதன் அடிப்படையில், புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த நான்கு மாதங்களில் பெறப்பட்ட 2.84 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில், 1.54 லட்சம் பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்க, மின் ஆளுமை முகமை ஒப்புதல் அளித்துஉள்ளது.
அந்த பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்கும் பணியில், உணவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.