போலீசில் புகார் அளிக்க அடையாள அட்டை அவசியம்: புதிய விதிமுறை அமலுக்கு வந்தது
போலீசில் புகார் அளிக்க அடையாள அட்டை அவசியம்: புதிய விதிமுறை அமலுக்கு வந்தது
UPDATED : பிப் 01, 2026 05:47 AM
ADDED : பிப் 01, 2026 02:49 AM

- நமது நிருபர் -:
'தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்க செல்பவர்கள், அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்' என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் கூறியதாவது:
போலீஸ் ஸ்டேஷன்களில், தற்போது புகார்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படுகின்றன. அதில் புகார் அளிப்பவர் முகவரி, தொடர்பு எண், எதிர்மனுதாரர், அவர்மீது உள்ள வழக்குகள், குற்றம் நடைபெற்ற இடம், சட்டப்பிரிவு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறுகின்றன.
ஆனால் புகார் அளிப்பவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் பெறப்படுவதில்லை. இதனால், சில நேரங்களில் புகார்தாரர்களிடம் விசாரணை செய்ய முயன்றால் அல்லது பொய் புகார் என தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
அதே சமயம், சி.சி.டி.என்.எஸ்., சாப்ட்வேர், மேம்படுத்தப்பட்டு 'சி.சி.டி.என்.எஸ்., 2.0' என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் வாயிலாக, புகாரின்படி பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர்., நேரடியாக வழக்கு தொடர்புடைய நீதிமன்றங்களுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், காகித பயன்பாடு, நேர விரயம் குறையும்.
இனி புகார் அளிக்க ஸ்டேஷன் வருபவர்கள், ஆன்லைன் மூலம் புகார் அளிப்பவர்கள் ரேஷன்கார்டு, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை, புகாருடன் இணைக்க வேண்டும்.
அவ்வாறு இணைத்தால் மட்டுமே புகார் பெற்றதற்கான, சி.எஸ்.ஆர்., மனு ரசீது வழங்கப்படும். இந்த நடைமுறை ஜன., 24 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

