ADDED : நவ 15, 2024 02:50 AM
சென்னை:'சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயிலில், புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தஞ்சையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில், தில்லை கோவிந்தராஜர் கோயில் உள்ளது. இந்த கோயில், அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிந்தராஜர் கோயிலின் கொடி மரத்தை அகற்றி விட்டு, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்திருப்பதாக, அறநிலையத்துறை ஆணையருக்கு, கடலுாரில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கு, ஆணையரும் அனுமதி அளித்துள்ளார்.
கொடி மரம் தொடர்பாக, வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில், 1860ல் பிரச்னை ஏற்பட்டது. பின், சிதம்பரம் முன்சிப் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. 160 ஆண்டுகளாக, அங்கு பிரமோற்ஸவம் நடக்கவில்லை. எனவே, தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிதாக கொடி மரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். திட்டத்தை கைவிட, அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்குமரன், ''புதிய கொடி மரத்தை அமைத்து, பின் பிரமோற்ஸவம் நடத்த, அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. புதிதாக கொடி மரம் அமைக்கக்கூடாது,'' என்றார்.
அறநிலைய துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''பிரமோற்ஸவம் நடத்துவது தொடர்பான வழக்கு, மற்றொரு அமர்வில் விசாரணையில் உள்ளது. கொடி மரம் சேதம் அடைந்துள்ளதால், புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும்,'' என்றார்.
இதையடுத்து, அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை, ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்யும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.