புதிதாக உருவான நகராட்சிகள் உள்ளூர் குழுமங்களாக மாற்றம் டி.டி.சி.பி., நடவடிக்கை
புதிதாக உருவான நகராட்சிகள் உள்ளூர் குழுமங்களாக மாற்றம் டி.டி.சி.பி., நடவடிக்கை
ADDED : பிப் 19, 2025 12:15 AM
சென்னை:தமிழகத்தில், 26 உள்ளூர் குழுமங்களில் சேராத நகராட்சிகளை கண்டறிந்து, அவற்றை கூட்டு உள்ளூர் குழுமங்களாக அறிவிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகள், நகர் - ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., நிர்வாகத்தில் வருகின்றன. இதில், நிர்வாக வசதிக்காகவும், முழுமை திட்டம் தயாரிப்பு போன்ற நகர்ப்புற திட்டமிடல் பணிகளுக்காகவும், உள்ளூர் குழுமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 26 உள்ளூர் குழுமங்கள் உள்ளன. இதுதவிர சுற்றுலா, தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளுக்கு, நகர்ப்புற திட்டமிடலில் முக்கியத்துவம் அளிப்பதற்காக, எட்டு இடங்களில் புதிய நகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கடந்த, 10 ஆண்டுகளில் உள்ளாட்சிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கை காரணமாக, பல்வேறு பகுதிகளில்புதிய நகராட்சிகள் வந்துள்ளன. இந்த நகராட்சிகள், எந்த உள்ளூர் குழுமத்திலும் இணையாமல் உள்ளன.
இதுகுறித்து, நகர், ஊரமைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகளை மையப்படுத்தி, அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து, உள்ளூர் குழுமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விடுபட்ட நகராட்சிகளை கண்டுபிடித்து, அவற்றை மையமாக வைத்து, புதிய உள்ளூர் குழுமங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், புதிதாக உருவான நகராட்சிகள் மட்டுமல்லாது, அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புற வளர்ச்சி முறைப்படுத்தப்படும்.
இப்பகுதிகளுக்கு தனித்தனியாக முழுமை திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.