அவிநாசியில் புதுமணப் பெண் தற்கொலை; கணவர், மாமனார், மாமியார் கைது
அவிநாசியில் புதுமணப் பெண் தற்கொலை; கணவர், மாமனார், மாமியார் கைது
UPDATED : ஜூன் 29, 2025 10:16 PM
ADDED : ஜூன் 29, 2025 09:46 PM

திருப்பூர்:அவிநாசி அருகே திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யாவுக்கும்,27, ஜெயம் கார்டன் பகுதியைச் சேந்த கவின் குமார்,28, என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச் சென்ற ரிதன்யா, மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார். தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை காரணமாக ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அதேவேளையில், ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் சில ஆடியோ மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். அதில், கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இனி தன்னால் வாழ முடியாத நிலையில், மற்றொரு வாழ்க்கை தேர்வு செய்யும் மனநிலை இல்லை என்றும் அந்த ஆடியோவில் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.