தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிறு, குறு தொழில்கள் வளர மானியம் தேவையா?

சிறு, குறு தொழில்கள் வளர மானியம் தேவையா?

சிறு, குறு தொழில்கள் வளர மானியம் தேவையா?


ADDED : ஆக 18, 2014 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2014 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பாரம்பரிய மிக்க தொழில்களாக விளங்குவது சிறுதொழில்கள் தான். மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 58 ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் உள்ளன.

தொழிற்சாலை வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. சென்னையை சுற்றியே இன்ஜினியரிங் உட்பட பல பெரிய தொழிற்சாலைகள் துவக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு தொழிற்சாலைகளை வருவதற்கு அரசும் முயற்சிகள் எடுப்பதில்லை. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சொல்லும் அளவிற்கு பெரிய தொழிற்சாலைகள் இல்லை.பெரிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. பெரிய தொழிற்சாலைகள் அமைந்தால்தான் அதை நம்பி உதிரி பாகங்கள் செய்யக்கூடிய சிறிய தொழிற்சாலைகள் வளரும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.மத்திய அமைச்சராக ஆர்.வெங்கட்டராமன், சி.சுப்ரமணியன் இருந்த போது, திருச்சி, ஒசூரில் பெரிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டது. மதுரை, துாத்துக்குடியில் விமான நிலையங்கள் உள்ளன. இதனால் பிற்படுத்தப்பட்ட பகுதியில்தொழிற்சாலைகளை துவங்கலாம்.

45 சதவீதம் மூடல்:

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மின்தடையால் 45 சதவீதம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. வங்கி கடன் உரிய நேரத்தில் சிறு தொழில் துவங்குபவர்களுக்கு கிடைப்பதில்லை. அதே நேரத்தில் வங்கி கடன்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுகிறது. இதனால் சிறுதொழில் முனைவோர் நஷ்டமடைந்து பலர் தொழிலை விட்டு விலகிவிட்டனர்.சிறுதொழில் முனைவோர் பெரிய தொழிற்சாலைகளைத்தான் நம்பி உள்ளனர். ஆனால் சிறுதொழிற்சாலை உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்கும் பெரிய தொழிற்சாலைகள், அதற்குரிய பணத்தை சிறு தொழிற்சாலைகளுக்கு பட்டுவாடா செய்வதில்லை. காலதாமதம் செய்கின்றன. இந்த அவலத்தை தீர்க்க தொழிற்சாலை (ஸ்பெஷலேசேஷன்) கோர்ட்டிற்கு சிறுதொழில் முனைவோர்கள் சென்றால், அந்த கோர்ட்டுக்கள் இந்த வழக்குகளை எடுப்பதில்லை. பெரிய தொழிற்சாலைக்கு எதிராக ஜப்தி நடவடிக்கைகள் துவங்குவதில்லை.

இதையும் மீறி 'ரெகுலர்' கோர்ட்டிற்கு சிறுதொழில் நிறுவனங்கள் நஷ்டஈடு கேட்டு சென்றால், சம்பந்தப்பட்ட பெரிய தொழிற்சாலைகள், கோர்ட்டிற்கு சென்ற சிறு தொழிற்சாலைகளிடம் 'ஆர்டர்' கொடுப்பதில்லை.சிறு தொழிற்சாலைகளிடம் உற்பத்தி பொருட்களை வாங்கும் பெரிய தொழிற்சாலைகள், பொருளுக்கு உரிய பணத்தை 45 நாட்களுக்குள் தர வேண்டும். ஆனால் பெரிய தொழிற்சாலைகள் அதுமாதிரி தராமல், ஓராண்டுகள் இழுத்தடிக்கிறது. இது சிறு தொழிற்சாலைகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

மானியம் தேவையில்லை:

சிறு தொழில்கள் துவங்குவதற்கு அரசு ஏராளமான மானியம் வழங்குகிறது. மானியம் தேவையில்லை. சிலர் மானியம் வாங்குவதற்காகவே தொழிற்சாலைகளை துவங்கி, பின்பு அவர்களே நஷ்ட கணக்குகாட்டி மூடிவிடுகின்றனர். இதற்கு பதிலாக வங்கி வட்டியை குறைக்கலாம்.சீனாவில் சிறு தொழிற்சாலைகளின் உற்பத்தியை அரசே வாங்கி மார்க்கெட்டிங் செய்கிறது. இதே போல அரசு மானியங்களை அள்ளி வீசாமல்,

சிறு தொழில் உற்பத்தி பொருட்களை வாங்கி அரசு மார்க்கெட்டிங் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

முற்றுரிமை போட்டி:

சிறு தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் வாங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது. பித்தளை, இரும்பு, ரப்பர், ஈயம் உட்பட பல மூலப்பொருட்களுக்கு ஒரு சிலர் மட்டுமே முற்றுரிமையாளராக உள்ளனர். இவர்கள் வைத்ததுதான் விலை. சிமென்ட் விலை மாதிரி அவர்கள் இஷ்டம் போல் விலைகளை உயர்த்திக் கொள்கின்றனர். ஆனால் சிறுதொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒரே விலையைத்தான் நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக ஒரு இரும்புராடு ரூ.100 என்றால், எவ்வளவுதான் மூலப்பொருள் விலை உயர்ந்தாலும், அதே விலைக்குத்தான் சிறுதொழில் உற்பத்தியை வாங்கி கொள்வார்கள். இதனாலும் சிறுதொழில்கள் நசுக்கப்படுகிறது.

அரசு கட்டுப்பாடு தேவை:

மூலப்பொருட்கள் விலை நிர்ணயம் செய்வது, வங்கி கடன் உட்பட பல செயல்களில் அரசின் தலையீடு தேவைப்படுகிறது. அரசு தலையிட்டால், சிறுதொழில்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. 'சிட்கோ' நிறுவனம் சிறு தொழிற்சாலை வளர்ச்சிக்கு உதவதாக இல்லை. தற்போது இடங்களை குறைந்த விலைக்கு வாங்கி, சிறு தொழில் துவங்குபவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கும் நிறுவனமாக மாறிவிட்டது.சிறு தொழில்களில் தமிழக தொழிலாளர்கள் திறமையானவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் 10 நாட்கள்தான் வேலை செய்கின்றனர். மீதியுள்ள நாட்களில் 'சின்னம்மா இறந்தார். தாத்தா இறந்தார், பெரியம்மாவுக்கு காய்ச்சல்' என விடுமுறை எடுக்கின்றனர். இலவசங்களை அரசு நிறுத்தி, வேலைவாய்ப்புகளை அளித்தால், இளைஞர்கள் தொழில் முனைவோராக ஆர்வம் காட்டுவார்கள். வடமாநில தொழிலாளர்களிடம் திறமை இல்லை. ஆனால் அவர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றுகின்றனர். தமிழக தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தால், சிறப்பாக செயல்படுவார்கள்.தமிழகத்தில் குடியிருப்பு உள்ள பகுதியில் சிறுதொழில்கள் அமைய கூடாது. இதனால் மாசு ஏற்படும். தொழிற்சாலைகளை தனிப்பகுதியில் அமைய வேண்டும். இதற்கு கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்தில் உணவு பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சிறுதொழில்கள் வளர்ச்சிக்கு திட்டமிட்டு தாங்கிபிடிக்க வேண்டும். அப்போது தான் நாட்டின் பொருளாதாரம் உயர்வதுடன் மக்களின் தனிப்பட்ட வருமானமும் உயரும்.

-- கே.ஆர்.தங்கராஜ்,

தமிழ்நாடு சிறு மற்றும்

குறுந்தொழில் சங்க மாநில முன்னாள் தலைவர்,

திண்டுக்கல்.

மொபைல்: 99944 57569.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us