பன்றி காய்ச்சலுக்கு ஆயுர்வேத, சித்த மருந்துகளே தீர்வு: டாக்டர் கிரிஜா அறிவுரை
பன்றி காய்ச்சலுக்கு ஆயுர்வேத, சித்த மருந்துகளே தீர்வு: டாக்டர் கிரிஜா அறிவுரை
ADDED : மார் 09, 2015 11:44 PM
''பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு, ஆயுர்வேதம், சித்த மருந்துகள் தான் சிறந்த தீர்வு. ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆயுர்வேதம், சித்த மருந்துகள் எளிதாக கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்,'' என, சஞ்சீவினி ஆயுர்வேதா யோகா மருத்துவ மைய இயக்குனர் கிரிஜா தெரிவித்தார்.
தமிழகத்தில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில், இதுவரை, 12 பேர் இறந்து விட்டதாக அரசு உறுதி செய்கிறது. இந்த சூழலில், தீர்வுக்கான வழி குறித்து, சென்னை, அடையாறு, சஞ்சீவினி ஆயுர்வேதா, யோகா மருத்துவ மைய இயக்குனர், டாக்டர் பி.எல்.டி., கிரிஜா கூறியதாவது: வசந்த காலத்தில், சளி, இருமல், தும்மலுடன் கூடிய, 'கப ஜுரம்' அதிகம் வரும்; சளியுடன் கூடிய காய்ச்சலைத் தான் இப்படி கூறுகிறோம். உணவு பழக்க வழக்கம் முக்கியம்; மிளகு, சீரகம் கூடுதலாக சேர்த்துக் கொள்வது நல்லது. சளியுடன் கூடிய காய்ச்சலுக்கு, ஆயுர்வேதம், சித்தாவில் கஷாயம், சூரணம் உள்ளன. பன்றிக் காய்ச்சல் என்பது, 'எச்1என்1'யின் வைரஸ் பாதிப்பால் வரும் காய்ச்சல். இந்த வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாறி, அவதாரம் எடுத்து தாக்குவதால், ஏற்கனவே தயாரித்த அலோபதி மருந்துகள் சரியாக வேலை செய்வதில்லை; எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கும் காய்ச்சல் கட்டுப்படுவதில்லை. அலோபதியில், பாதிக்கப்பட்டோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். தடுப்பு மருந்தே இல்லாத நிலையில், அவருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி இருந்து தப்பினால் தான் உண்டு. உறுதியான தடுப்பு மருந்து இல்லாததால், 'கைகளை சுத்தமாக கழுவுங்கள்; முகத்தை நன்கு கழுவுங்கள்' என்று தான் சொல்கிறோம். அலோபதி மருத்துவம் சரியான தீர்வாக இருக்காது. சளி, தும்மலுடன் காய்ச்சல் வந்தால் பொதுமக்கள், ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தை நாடுவதே நல்லது. மருந்துகளால் நோய் தாக்கம் குறையும்; எதிர்ப்பு திறன் மேம்படும்; எந்த வகை காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். இன்னும், பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு போதிய மையங்கள் இல்லை. பரிசோதிக்க, 4,000 - 6,000 ரூபாய் வரை செலவாகிறது. பரிசோதனை முடிவுகள் கிடைக்க இரண்டு, மூன்று நாட்கள் ஆகின்றன. ஆயுர்வேதா, சித்தாவுக்கு சென்றால், பன்றிக்காய்ச்சல் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் காலத்திற்குள் நோய் தீர்ந்துவிடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'சிக்குன் குனியா' பாதிப்பு வந்தபோது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுர்வேதா, சித்தா மருந்துகள் தாராளமாக தரப்பட்டன; நிலைமை கட்டுக்குள் வந்தது. அதுபோன்று, தற்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆயுர்வேதா, சித்தா மருந்துகள் கிடைக்க அரசு வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பகல் தூக்கம் வேண்டாம்...!
* இந்த காலங்களில், தயிர், மோர், பழம், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், குளிர்ந்த நீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* பகலில் தூக்கம் போடுவது, சளியின் அளவை அதிகரிக்கும்.
* காய்ச்சல் இருந்தால் சாதாரண அரிசி, கோதுமை, பருப்பு உணவுகளை சாப்பிடலாம்; காரத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
* இறைச்சி உணவுகள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* குடிப்பதற்கு, வெந்நீர் மட்டுமே பயன்படுத்துங்கள்; ஏப்ரல், மே மாதங்களில், இந்த நடைமுறையை மக்கள் கடைபிடிப்பது அவசியம்.
- நமது நிருபர் -
