ADDED : ஏப் 06, 2016 08:38 PM

'நாடாது நட்டலின் கேடில்லை; நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு' என்றார், வள்ளுவப் பெருந்தகை.
அதாவது, ஒருவரோடு ஒருவர் விரும்பி நட்பு செய்தபின், அவரை விட்டுப் பிரிதல் இயலாது. எனவே, நட்பு கொள்ளுமுன் ஆராயாமல் விட்டால், அதை விட கேடில்லை என்று பொருள். இன்றைய தி.மு.க.,- - காங்., கூட்டணியைப் பார்த்தால், இந்த குறள் மனதில் வந்து போவதை தடுக்க இயலவில்லை. கடந்த, 2004 முதல், இறுகிய நட்போடு வலம் வந்த இந்த இரு கட்சிகளும், இடையில் கொஞ்ச நாள் ஊடல் கொண்டன. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று அதற்கு விளக்கம் சொன்னார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. பின்னர், தேர்தல் அறிவிக்கைக்கு முன்னர் நட்பு பூண்டு, இப்போது மீண்டும் இணைந்திருக்கின்றனர்.கூட்டணி நீடிக்குமா என்பது, காலத்தையும், களத்தையும் பொறுத்தது. ஆப்பிரிக்காவில் உள்ள, ஜாம்பியா நாட்டின் பூர்வகுடிகளான மண்டிங்கா இனத்தில், மரபுக்கதை ஒன்றுள்ளது. அந்த கதை இதுதான்: ஆற்றங்கரையோர நாவல் மரத்தில், குரங்கு ஒன்று நாவல் பழங்களை ருசிப்பது பழக்கம். மரத்தடியின் கீழே வந்து இளைப்பாறுவது, ஒரு முதலையின் வழக்கம். ஒன்றிரண்டு பழங்களை அக்குரங்கு முதலைக்கும் போட, நாவல் பழ ருசியில் இரண்டும் நட்பு பூண்டன. இடையில் இதைக் கண்ட நரி, இந்த நட்பை முறிக்க முயன்றது. குரங்கு இல்லாத நேரத்தில் முதலையிடம், 'நாவல் பழ ருசியே இப்படியென்றால், அதை தினமும் உண்ணும் குரங்கின் ஈரல், எவ்வளவு ருசியாக இருக்கும்' என்று, 'கொளுத்தி' போட்டது. நாவில் எச்சிலுாற முதலையும், குரங்கை பதம் பார்க்க சந்தர்ப்பம் தேடியது.ஒருநாள், அக்கரையின் அருமை, பெருமை பேசி, குரங்கை நைசாக அழைத்தது முதலை. நண்பனின் அழைப்பை ஏற்று, முதலையின் முதுகிலேறி ஆற்றில் பயணித்தது குரங்கு. அப்போது, ஈரல் குறித்த ஆசையை வெளியிட்டது முதலை. அதிர்ந்த குரங்கு, நிதானமாக யோசித்து, 'அந்தோ நண்பனே, நீ கேட்டிருந்தால், என் ஈரலை தரமாட்டேனா; நான் ஈரலை அலசி, மரத்திலே காயப்போட்டு வந்து விட்டேன். மீண்டும் என்னை அழைத்துப் போனால் எடுத்துத் தருகிறேன்' என்றது.நண்பனை நம்பிய பேராசை முதலையும், மரத்தின் அடியில் இறக்கிவிட, தாவி குதித்து தப்பியது குரங்கு. முட்டாள் முதலை ஏமாந்து போனது. இதிலே யார் முதலை; யார் குரங்கு; யார் நரி என்பதெல்லாம் கோபாலபுரமும், சத்தியமூர்த்தி பவனுமே அறிந்த பரம ரகசியம். கூடா நட்பு கேடாய் முடியும் என்று, அப்போது சொன்ன கருணாநிதி, இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறார். தேர்தலுக்குப் பின் மீண்டும் இதே வாக்கியத்தை, 'ரிப்பீட்' செய்ய வேண்டிய நிலை வருமோ!எத்தனையோ பார்த்து விட்டோம்; இதையும் தான் பார்த்து விடுவோமே!எம்.சக்தி, கோவை.
