ADDED : ஏப் 18, 2011 01:12 AM

அழகர்கோயில் ராஜ கோபுரத்தில் 18ம் படி கருப்புசாமி குடி கொண்டு காவல் தெய்வமாக உள்ளார். கருப்பு எப்படி இங்கு காவல் தெய்வமானார் தெரியுமா? இங்குள்ள பெருமாள் அழகாகவும், பிரகாசமாகவும் காணப்பட்டார். இவரது புகழ் எங்கும் பரவியது. அழகரின் அழகில் மயங்கிய திருவனந்தபுரம் மகாராஜா தனது நாட்டில் பிரதிஷ்டை செய்ய எண்ணினார். படை எடுத்து இங்குள்ள மன்னனை எதிர்கொள்வது எளிதானது அல்ல. அதனால் எப்படி கொண்டு செல்வது என குழம்பினார் மன்னன்.
அப்போது அங்கிருந்த 18 மந்திரவாதிகளை அழைத்து, அழகரை கொண்டு வரும்படி கூறினார். அழகர்கோயிலுக்கு வந்த அவர்கள் அரூவமாக (உருவமற்றவர்களாக) மாறி கருவறைக்குள் சென்றனர். பல நாட்கள் அரூவமாக அங்கு தங்கி இருந்து மந்திரங்களை உச்சரித்த அவர்கள் ஒருநாள் இரவு அழகரை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது கோயில் பட்டர்கள் கனவில் தோன்றிய பெருமாள், தன்னை உருவமற்ற சிலர் 'ஆகர்ஷனம்' செய்ய முயல்வதை கூறினார். உருமாறிய அவர்களை கண்டுபிடிக்க மாற்று சக்தி மந்திரம் ஜெபித்து பட்டர்கள் கண்டுபிடித்தனர். தாங்கள் தவறை உணர்ந்த மந்திரவாதிகள் 18 பேரும் ராஜகோபுரம் படிகளில் அமர்ந்து, கோயிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல் தெய்வமாக இருக்கிறோம் என்றனர். மேலும் மூலவர் பெருமாளுக்கு அணிவிக்கும் மாலை அலங்காரம் மற்றும் ராக்கால பூஜையின் போது சுவாமிக்கு நிவேத்தியம் செய்யும் பிரசாதம் ஆகியவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டனர். சுந்தரராஜ பெருமாளும் அவர்களுக்கு காட்சி கொடுத்து அதன்படி நடக்கும் என அருளினார். முன்பு கோயில் கோபுரத்தில் எப்போதும் இருள் சூழ்ந்து கருப்பாக காணப்படும். அதனால் 18 படிகளில் உருவமற்ற நிலையில் அமர்ந்திருக்கும் அவர்கள் யாருடைய கண்ணுக்கும் புலப்பட மாட்டார்கள். காவல் தெய்வம் 18ம் படி கருப்பு என அழைக்கப்பட்ட அவர்கள் மருவி கருப்பசாமி என அழைக்கப்படுகின்றனர். அன்று முதல் பெருமாளுக்கு அணிவிக்கும் மாலை, இரவு பூஜை செய்யும் பிரசாதம் ஆகியவற்றை காவல் தெய்வம் கருப்புக்கே வழங்கப்படும். வேறு யாருக்கும் வழங்குவது இல்லை.
