ADDED : பிப் 06, 2021 08:25 PM
சுய சம்பாத்திய சொத்துரிமையை, அதன் உரிமையாளர், தான் விருப்பப்பட்ட வாரிசுகள் பெயருக்கு கொடுக்கலாம். இதை பெறுபவர், அந்த சொத்துக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதே போன்று, பரம்பரை சொத்துக்கள் விஷயத்திலும், பல தலைமுறையாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் பங்கு பிரிப்பது வழக்கமாக உள்ளது. உண்மையில், எத்தனை தலைமுறையாக உங்கள் குடும்ப பயன்பாட்டில் இருந்தாலும், அந்த சொத்துக்களின் சட்ட ரீதியான உண்மை நிலையை சரிபார்க்க வேண்டும்.
குடும்ப பாகப்பிரிவினை வாயிலாக ஒருவருக்கு கிடைத்த மனை அல்லது வீட்டுக்கான பட்டா கண்டிப்பாக தேவை. முன்னோர் கொடுத்தது என்ற காரணத்தாலேயே அந்த சொத்துக்கள் உங்களுடையதாகி விடாது. சட்டப்படி, உங்கள் முன்னோர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். பட்டா இல்லாத சொத்துக்கள் பாகப்பிரிவினை வாயிலாக பெறுவது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.
பல்வேறு காரணங்களால், குடும்ப ரீதியாக பாகப்பிரினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில் தான், பழைய பட்டா இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உட்பட சொத்துக்களை வாங்குவது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடலாம்.
சில இடங்களில் முன்னோர் வழியில் வழங்கப்படும், 1 ஏக்கர் நிலத்துக்கு பட்டா இருக்கும், அதனுடன் இணைந்து பயன்பாட்டில் இருக்கும் சில சென்ட் நிலங்கள் பட்டா இல்லாமல் இருக்கும். பாகப்பிரிவினையின் போது, இது அப்படியே அடுத்த தலைமுறைக்கு ஆவண ரீதியாக வந்து விடும். இதை பெறுபவர், வங்கிக்கடன் போன்ற பணிகளுக்கு செல்லும் போது தான் சிக்கல் ஏற்படும். இதில், பட்டா இல்லாத பாகத்தால் எழும் சட்ட சிக்கல், ஒட்டுமொத்த பாகப்பிவினை பரிமாற்றத்தையே பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, பாகப்பிரிவினை வாயிலாக சொத்து பெறுவோர், அந்த சொத்துக்களின் தற்போதைய நிலை என்ன என்பதை சரிபார்க்க வேண்டும்.
பாகப்பிரிவினை பத்திரத்தில் பட்டா இல்லாத சொத்துக்களை தவிர்க்க வேண்டும். சில சொத்துக்கள் பட்டா இல்லாமல் இருந்தாலும், அதற்கு பட்டா பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன என்று பார்க்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்து பட்டா பெறுவதற்கு வாய்ப்பு இருந்தால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பட்டா பெற்ற பின், அதை பங்கு பிரிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என்கின்றனர், வருவாய் துறை அதிகாரிகள்.
