ADDED : பிப் 13, 2022 01:08 PM

'இசையால் வசமாகா இதயம் எது... இறைவனே இசை வடிவம் எனும்போது... தமிழ் இசையால் வசமாகா இதயம் எது' என்ற பக்தி பாடல் அத்தனை உண்மையை அழகாய் சொன்னது. இந்த இசையை அடுத்த தலைமுறையினரும் அறியும் வண்ணம் 'தமிழ், கன்னட சினிமாவில் இசை' என்ற ஆய்வுக்காக பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளார் பின்னணி பாடகி பிரியதர்ஷினி.
இவர் பிறந்தது சென்னை. வளர்ந்தது சிங்கப்பூர். சிறு வயதிலேயே இவருக்குள் இருந்த இசையார்வம் பாடகியாக உருவாக்கியது. சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளில் பாடியவருக்கு 2003ல் இசையமைப்பாளர் பரத்வாஜ் மூலம் தமிழ் சினிமாவில் 'காதல் டாட் காம்' படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. இதனை கச்சிதமாக பயன்படுத்திய பிரியதர்ஷினி, தமிழ், கன்னடம், தெலுங்கில் 110க்கும் மேற்பட்ட படங்களில் பலநுாறு பாடல்களை பாடியுள்ளார்.
இவர் 300க்கும் மேற்பட்ட ஆன்மிக பாடல்களையும் பாடியுள்ளார். இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மைசூர் பல்கலையில் 100 ஆண்டுகால சினிமா இசையின் சிறப்புகள், இசை நுணுக்கங்களை உள்ளடக்கி 'தமிழ், கன்னட சினிமாவில் இசை' என்ற ஆய்வுக்காக பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவர் இசை பவுண்டேஷனும் நடத்தி வருவது கொசுறு தகவல்.
சென்னை... சிங்கப்பூர்... என பிஸியாக இருந்தவர் கூறியதாவது: இசையின் மரபு, பரிணாமங்களை சொல்வதற்கு புத்தகங்கள் கிடையாது. வருங்கால சந்ததிகள், இசைக் கலைஞர்களுக்கு தமிழ், கன்னட சினிமா இசை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆய்வு செய்தேன். பழம்பெரும் இசையமைப்பாளர்கள், பாடர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்களின் அனுபவம் ஆய்வு தொடர்பான விபரங்கள், தகவல்களை சேகரிக்க உதவியது. பாட்டோடு நிறுத்தி விடாமல் நடிப்பிலும் கவனம் செலுத்துகிறேன் என்றார்.
சிவன்