ஷஷாங்க் சுப்பிரமணியத்திற்கு பிரான்சின் செவாலியர் விருது
ஷஷாங்க் சுப்பிரமணியத்திற்கு பிரான்சின் செவாலியர் விருது
ADDED : நவ 05, 2022 12:33 AM

சென்னை:பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஷஷாங்க் சுப்பிரமணியம், 44, பிரான்ஸ் அரசின் உயரிய விருதான, 'செவாலியர் விருது'க்கு தேர்வாகி உள்ளார்.
புல்லாங்குழல் இசைக் கலைஞர், இசையமைப்பாளர், இசை ஆசிரியர் என்றெல்லாம் முத்திரை பதித்துள்ள ஷஷாங்க், சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் 'கலைமாமணி விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
ஆறு வயதிலேயே இசை கச்சேரி நடத்த துவங்கி விட்ட அவர், 12 வயதிலேயே, சென்னை மியூசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று, வரலாறு படைத்தவர்.
இந்நிலையில், இவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய கவுரமான 'செவாலியர் விருது' அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, ஷஷாங்க் சுப்பிரமணியத்திற்கு வாழ்த்து தெரிவித்து, பிரான்ஸ் கலாசார அமைச்சர் ரீமா அப்துல் மலாக் அனுப்பிய செய்தி:
செவாலியர் விருது என்பது, பிரான்ஸ் மற்றும் சர்வதேச கலை உலகிற்கு நீங்கள் அளித்த பங்களிப்புகளுக்கு, எங்கள் நாடு அளிக்கும் கவுரவம்.
புல்லாங்குழல் இசையால், கர்நாடக இசை உலகில் பெரும் புரட்சியை செய்துள்ளீர்கள். இந்த விருது, பிரான்ஸ் நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள நட்பை வெளிப்படுத்துகிறது.
பிரெஞ்சு கலைஞர்களுடன் இணைந்து நீங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகள், பிரான்சில் இனி அடிக்கடி நடத்தப்படும். இது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

