தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., அரசை வெளுத்துக்கட்டிய விஜய் கட்சி தீர்மானங்கள்!

தி.மு.க., அரசை வெளுத்துக்கட்டிய விஜய் கட்சி தீர்மானங்கள்!

தி.மு.க., அரசை வெளுத்துக்கட்டிய விஜய் கட்சி தீர்மானங்கள்!


UPDATED : நவ 03, 2024 02:09 PM

ADDED : நவ 03, 2024 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2024 02:09 PM ADDED : நவ 03, 2024 11:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நடிகர் விஜய் தலைமையில் நடந்த த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சொத்து வரி, மின்கட்டண உயர்வுக்காகவும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 ம் தேதி நடந்தது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை பனையூரில் த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1.கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றுதல்

காமராஜர், ஈ.வெ.ரா., அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரையும், கட்சியின் கொள்கைகளையும் உறுதியாக பின்பற்றுவோம்

2. நன்றி தெரிவித்தல்

விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டை வெற்றி பெற வைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி

3. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள்

கட்சியின் கொள்கைகளுக்கு '' மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்'' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்பதை விளக்க வேண்டியது நமது கடமை

4. ஜனநாயக கொள்கை

ஒரேநாடு ஒரே தேர்தல் என்பதை சட்டமாக்குவதற்காக ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். லோக்சபா தத்துவத்திற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பா.ஜ., அரசின் சட்டத்திற்கு கண்டனம்

5. பெண்கள் பாதுகாப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கச் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. சமூக நீதிக் கொள்கை தீர்மானம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று தி.மு.க., அரசு கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பித்து கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முதலில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்.

7. மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானம்

மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் நீட் தேர்வை மாநில அரசே நீக்கி தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்ற இயலும்

8. விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்

சென்னையை பாதுகாக்கவும், விவசாயிகளின் மன நிலையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஓரு கொள்கையாகவே முன்னெடுப்போம்.

என்.எல்.சி.,யில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தக்கூடாது.

9. கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்

சென்னையை போன்று கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.

10. இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க

இலங்கை தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசை ஆலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கை தூதர் ஆக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். இலங்கை தமிழருக்கான நிரந்தர தீர்வைக் கொண்டு வர பொது வாக்கெடுப்பை மத்திய மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. தீவு கூட்டங்களை கொண்ட கடற்பகுதியை கொண்டநாடுகள் தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக் கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஐ.நா., வழிகாட்டி உள்ளது.கடல் எல்லைகளை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யக்கூடாது எனக்கூறியுள்ளது. இதனை இலங்கை அரசு கடைபிடிக்கவில்லை. மத்திய அரசும் வலியுறுத்தவில்லை. மாநில அரசு கேள்வி எழுப்பவில்லை. இந்த சர்வதேச சட்டத்தை வலியுறுத்தி மீனவர்களுடன் இணைந்து த.வெ.க., போராடும்

12. நிதிச் சுமை திணிப்பு

அரசின் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி உயர்வு போன்று மக்கள் மீது மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்த தி.மு.க., அரசுக்கு கண்டனம்

13. சட்டம் ஒழுங்கு சீர்கேடு

தமிழகத்தில் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் புழக்கம் போன்ற நிர்வாக சீர்கேடுகளைச் சரி செய்யாமல் மக்கள் நலனைக் காட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் தி.மு.க., அரசுக்கு கண்டனம்.

14. மின் கட்டணம் மாற்றியமைக்க தீர்மானம்

தேர்தல் வாக்குறுதியை வழக்கம் போல் பறக்கவிட்டுள்ள தி.மு.க., மின் கட்டண உயர்வை திணித்துள்ளது. இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செய்யும் முறையை கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்

15. மதுக்கடைகளை மூட

மதுக்கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விட கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்று திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

16. உச்சநீதிமன்ற கிளை

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற அமர்வில் தமிழை தாய்மொழியாக கொண்ட நீதிபதி ஒருவர் இருக்கவேண்டும்.

17. தமிழகத்தின் பெருமை

தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் சென்னையில் பிரமாண்டமான அருங்காட்சியகம் கட்ட வேண்டும்.

18. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பெருமை

தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படும் பஸ் ஸ்டாண்டுகள், பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு தமிழ் மண்ணில் இருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்டத் தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும்.

19. காயிதே மில்லத் பெயரில் விருது

ஆண்டுதோறும் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பண முடிப்பும் வழங்க வேண்டும்.

20. முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய

தமிழகத்தில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்புத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

21. இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை

கன்னியாகுமரியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்று அபாயம் வளைவிக்கும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

22. இஸ்லாமியர் உரிமை தீர்மானம்

கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

23. நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வால் மாணவ - மாணவியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24. தகைசால் தமிழர் விருதுக்கு வரவேற்பு

தமிழகத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது ' வழங்கும் தமிழக அரசுக்கு வரவேற்பு

25.ராக்கெட் ஏவுதளம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதுடன், வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வரவேற்பு

26. இரங்கல் தீர்மானம்

த.வெ.க., மாநாட்டிற்கு வரும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது ஆகிய 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us