தஞ்சை, ராமநாதபுரத்தில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதை தடுக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் வேட்டை
தஞ்சை, ராமநாதபுரத்தில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதை தடுக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் வேட்டை
ADDED : ஏப் 21, 2025 05:43 AM

சென்னை : தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில், வெவ்வேறு பெயர்களில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடப்பதால், அங்கு தேடுதல் வேட்டையை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கண்காணிப்பு
தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க, காவல் துறையில், கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., எனப்படும், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு, ஏ.டி.எஸ்., எனப்படும், பயங்கரவாத தடுப்பு பிரிவு கள் செயல்படுகின்றன.
காவல் நிலைய எல்லை களில், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து, நுண்ணறிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., எனப்படும், உளவுப் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2022ல் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கோவை, திருநெல்வேலி பகுதியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, வெவ்வேறு பெயர்களில் மர்ம நபர்கள் ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரு மாவட்டங்களிலும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் முகாமிட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டு வெடிப்பு
இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையில், 2019ல் ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் கூட்டாளிகள், தமிழகத்தில் வெவ்வேறு இயக்கங்கள் பெயரில், ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் பகுதியில் ரகசிய விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. மர்ம நபர்கள், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
எனவே, அவர்களின் முயற்சியை தடுக்க, அந்த மாவட்டங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

