கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான மூவரிடம் கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான மூவரிடம் கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
ADDED : நவ 12, 2024 03:18 AM

கோவை: கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை, கோவை அழைத்து வந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், இதில் பலியானார்.
குற்றப்பத்திரிகை
இந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில், 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில், தேசிய புலனாய்வு முகமை யான, என்.ஐ.ஏ.,யின் அதிகாரிகள், நான்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இம்மாதம் 21ம் தேதி, போத்தனுாரைச் சேர்ந்த அரபிக் கல்லுாரி ஆசிரியர் அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன் மற்றும் உக்கடம் ஜி.எம்., நகரைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி பவாஸ் ரஹ்மான் ஆகியோரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும், ஒருவரிடம் இருந்து கமிஷன் தொகைக்காக நிதி திரட்டி தந்ததும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தத்தில் தீவிரமாக இருந்ததும், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த அபு அல்ஹசன் அல்ஹாஸ்மிக்கு வாக்குறுதி கொடுத்து, தாக்குதல் நடத்துவதாக உறுதியேற்று இருந்ததும் தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
இதனால், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. அவர்களை, பலத்த பாதுகாப்புடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னை அழைத்து சென்றனர். தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் காவலில் எடுக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணைக்காக மூன்று பேரையும் நேற்று கோவை அழைத்து வந்தனர்.
அவர்களிடம், கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ., முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, அவர்கள் மூன்று பேரையும், கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.