பயங்கரவாதி மன்னை பாவா கூட்டாளிக்கு வலை தேடுகிறது என்.ஐ.ஏ.,
பயங்கரவாதி மன்னை பாவா கூட்டாளிக்கு வலை தேடுகிறது என்.ஐ.ஏ.,
ADDED : ஜூலை 07, 2025 03:10 AM
சென்னை: 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்து வந்த, மன்னை பாவாவின் நெருங்கிய கூட்டாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளத்தை சேர்ந்தவர் பாவா பக்ருதீன், 44. இவர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மன்னார்குடியில் வசித்து வந்தார். அதனால், 'மன்னை பாவா' என, அழைக்கப்படுகிறார்.
இவர், 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்த வழக்கில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
தற்போது, மன்னை பாவாவின் நெருங்கிய கூட்டாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
தஞ்சாவூரில் அறக்கட்டளை நடத்தி, மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு, மன்னை பாவா பயிற்சி அளித்து வந்தார். இவரும், இவரது கூட்டாளிகளும், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்வதை, முழுநேர பணியாக செய்து வந்துள்ளனர்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தேனி என பல மாவட்டங்களில், அரபிக் கல்லுாரிகளின் கிளைகளை துவக்கி பயங்கரவாத பயற்சி அளித்துஉள்ளனர். இவர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய சங்கேத மொழி குறித்த டிஜிட்டல் ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றை ஆய்வு செய்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த, 35 வயது நபர், மன்னை பாவாவின் கட்டளைகளை நிறைவேற்றும் சக்தியாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் வாயிலாக தான், மன்னை பாவாவுக்கு தொழில் அதிபர்களிடம் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர், தேனியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அவரை தேடும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

