என்.ஐ.டி., கல்வி நிறுவனத்துடன் என்.எல்.சி., ஒப்பந்தம்
என்.ஐ.டி., கல்வி நிறுவனத்துடன் என்.எல்.சி., ஒப்பந்தம்
ADDED : பிப் 10, 2026 04:29 AM

நெய்வேலி: தொழில்துறை மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு இடையே அர்த்தமுள்ள ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும் அவசியம் என, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.
பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி., உயர் அதிகாரிகள் மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 'பக்கெட் வீல் டீத்' களுக்கான புதிய மூலப்பொருளை உருவாக்குதல் மற்றும் அதன் ஆயுட்காலத்தை மேம்படுத்துதல் என்ற ஆய்விற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ. 50. 73 லட்சம் மதிப்பீட்டில், 2 ஆண்டுகள் நடைபெறவுள்ள இந்த ஆராய்ச்சி, பழுப்பு நிலக்கரி சுரங்கப் பணிகளில் மிக முக்கியமான அங்கமான 'பக்கெட் வீல்' இயந்திரத்தின் டீத்களுக்குத் தேவையான நவீன மூலப்பொருட்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், சுரங்கம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கியத்துறைகளில் சிறந்த செயல்பாட்டு திறன், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப தற்சார்பு ஆகியவற்றை அடைவதற்கு ஆராய்ச்சி சார்ந்த கண்டுபிடிப்புகளே அடிப்படையாகும். பிரதமர் மோடியி ன் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், நமது உள்நாட்டு ஆராய்ச்சித் திறன்களை வலுப்படுத்துவதும், தொழில்துறை மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு இடையே அர்த்தமுள்ள ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும் மிக அவசியமாகும்.
இத்தகைய கூட்டாண்மை, தொழில்நுட்ப மேம்பாட்டை விரைவுபடுத்துவதோடு, இறக்குமதிச் சார்ந்திருப்பதைக் குறைத்து, வளர்ந்த இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உலகளாவிய போட்டித்திறனை உருவாக்க உதவும் என்றார்.

