ரூ.7 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் என்.எல்.சி., சேர்மன் பெருமிதம்
ரூ.7 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் என்.எல்.சி., சேர்மன் பெருமிதம்
ADDED : ஜூலை 18, 2025 05:16 AM

நெய்வேலி: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த ரூ.7 ஆயிரம் கோடியை என்.எல்.சி., இந்தியா நிறுவன முதலீட்டிற்கு வழங்குவதற்கு மத்திய அரசு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
என்.எல்.சி., நிறுவனத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒரு முக்கிய ஒப்புதலை அளித்துள்ளது.
தற்போதைய பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீட்டு வழிகாட்டுதல்களில் இருந்து விலக்கு அளித்து, என்.எல்.சி., அதன் முழு உரிமையுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துணை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா ரினியூபிள்ஸ் லிமிடெட்டில் 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், என்.ஐ.ஆர்.எல்., திட்டங்களில் சுதந்திரமாகவோ அல்லது கூட்டு முயற்சிகள் மூலமாகவோ முதலீடு செய்யவும் இந்த குழு அதிகாரம் அளித்துள்ளது.
துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத நிகர மதிப்பு உச்சவரம்பிலிருந்து என்.எல்.சி., மற்றும் என்.ஐ.ஆர்.எல்., க்கு விலக்கு அளிக்கிறது.
மத்திய அரசு வழங்கிய தொலைநோக்கு ஆதரவு, என்.எல்.சி.,யின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.
இது ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், பசுமை ஆற்றல் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்குமான எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த அதிகாரமளிப்புடன், அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும், 2030க்குள் 10 ஜி.டபிள்யு புதுப்பிக்கத்தக்க திறனை அடைவதற்கும், 2047க்குள் 32 ஜி.டபிள்யு., திறனை அடைவதற்கும் உதவும்.
இவ்வாறு பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறினார்.