தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது; கட்சிகளுக்கு தடை விதிக்க வழக்கு
தேர்தலுக்கு முன் கூட்டணி கூடாது; கட்சிகளுக்கு தடை விதிக்க வழக்கு
ADDED : பிப் 27, 2026 05:11 AM

சென்னை: தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு:
லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக, சுயநல நோக்கில் தேர்தலுக்கு முன் கட்சிகள் கூட்டணி அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதனால், தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, மக்கள் நலனை பற்றி அக்கறை கொள்வதில்லை. தேர்தல் வெற்றிக்கு பின், மக்கள் தீர்ப்பை இரண்டாம்பட்சமாக கருதி கட்சிகள் அணி மாறுவதால், ஆட்சியில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு விடுகிறது.
எனவே, அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும். தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல் தேர்தல் அறிவிப்புக்கு முன், பெரிய கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபடுவதால், அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின், 13 நாட்கள் தான் பிரசாரத்துக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த காலக்கெடுவுக்குள் சிறிய கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களால் சின்னத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாது.
இந்த சமமற்ற நிலையை நீக்க, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

