தி.மு.க., ஆலமரம் யாராலும் வீழ்த்த முடியாது: அமைப்பு செயலர் பாரதி
தி.மு.க., ஆலமரம் யாராலும் வீழ்த்த முடியாது: அமைப்பு செயலர் பாரதி
ADDED : மார் 30, 2025 02:51 AM

உச்சிப்புளி: ''தி.மு.க., ஒரு ஆல மரம்; அது பலமாக உள்ளதால், யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு 4,034 கோடி ரூபாய் வழங்காமல் உள்ளது.
அதைக் கண்டித்து, தமிழகம் முழுதும் 1,134 இடங்களில், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார்.
பின், அவர் கூறியதாவது:
வரும் 6ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. நுாறு நாள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கி விட்டு, பிரதமர் தமிழகம் வர வேண்டும்.
தி.மு.க., ஒரு ஆல மரம் என்பதால், அதை யாராலும் வீழ்த்த முடியாது. புதிதாக கட்சி துவங்கும் அனைவரும், தி.மு.க.,வை தாண்டி தான் அரசியல் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.