UPDATED : நவ 12, 2024 10:18 PM
ADDED : நவ 12, 2024 10:15 PM

நாகர்கோயில்: ''2026 சட்டசபை தேர்தலில் எனக்கு ஓட்டுப்போடாவிட்டால், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
குளச்சலில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியதாவது: சட்டசபை, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோற்றோம். உள்ளாட்சி தேர்தலில் ஒரு சிலர் வெற்றி பெற்ற போதும் தோற்றோம். 2026 சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டோம். எங்களை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தனித்து நிற்கிறோம்.
உண்மையான தலைவனுக்கு தகுதி, தான் பிறந்த மண்ணை மக்களை நேசிக்க வேண்டும். நம்ப வேண்டும். நாங்கள் நேசிக்கிறோம். நம்புகிறோம். தனித்து நிற்கிறோம். நாம் வணங்கும் சாமியையும் பூமி தான் தாங்கி கொண்டு உள்ளது. நாம் வணங்க பல சாமிகள் உண்டு. வாழ்வதற்கு ஒரே பூமிதான்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் கள்ளுக்கடை உள்ளது. அம்மாநில முதல்வர்களுக்கு சாராய தொழிற்சாலை இல்லை. தமிழக முதல்வருக்கு உள்ளது. திராவிடம் இந்த மண்ணை நாசமாக்குகிறது. இந்த நிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றி, கல்குவாரியை வெட்டி எடுத்தவர்களை போட்டு புதைப்பேன்.
தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையில் நாம் ஆட்சி அமைக்க போகிறோம் என தெரிந்தால், அனைத்தும் சரியாகிவிடும். வட மாநிலத்தவர்கள் கிளம்பிவிடுவர். தமிழர்கள் குடித்துவிட்டு தூங்க முடியாது. வேலைக்கு போக வேண்டும். டாஸ்மாக்கை மூடுவேன். பொருளாதாரம் எங்கு உள்ளது என தெரியாமல் சாராயம் கொடுத்து சாகடிக்கிறார்கள்.
இதற்கு மேலும் ஓட்டு போடாமல் முச்சந்தியில் விட்டால், 2026க்கு பிறகு முச்சந்தியில் என்னை கத்தவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளை விட்டால் கன்னியாகுமரியில் வெல்ல வேறு ஆள் இல்லை என்ற மன நிலையை மாற்றுவோம். இவ்வாறு சீமான் பேசினார்.