தி.மு.க., ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை
தி.மு.க., ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை
ADDED : டிச 28, 2024 07:45 PM
சென்னை:'தி.மு.க., ஆட்சியில் பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை விரும்பாக்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் துாணில் ஒட்டப்பட்டிருந்த, முதல்வர் ஸ்டாலின் 'போஸ்டர்' மீது, வயதான தாய் ஒருவர், தன் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக செருப்பை எறிந்து, மண் வாரித் துாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என, யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு கேடு கெட்ட ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மீது, பொது மக்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் இருப்பதை தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
நியாயப்படி, முதல்வர் தன் ஆட்சியை சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, காணொலியை தன் சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரை கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்ய தேடி வருகின்றனர்.
போலீசில் புகார் அளித்திருக்கும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிராபகர் ராஜா, கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க.,வினருக்காக, காவல் நிலையத்தில் பஞ்சாயத்து செய்ய போன கேவலமான வரலாறு கொண்டவர்.
தி.மு.க., ஆட்சியில் பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய போலீசுக்கு வெட்கமாக இல்லையா?
கைது செய்யப்பட்ட பிரதீஷை உடனே விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாய் மீதான வழக்கையும் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

